எலும்புகளை செயற்கை முறையில் மீண்டும் உடலில் பொருத்தும் முறைக்கு `பிராஸ்தெட்டிக்ஸ்' என்று பெயர். விபத்துக்குள்ளாகி எலும்பு முறிவு ஏற்பட்டால், குறிப்பிட்ட பகுதியை அசைக்காமல் இருக்க மரத்தின் குச்சியையோ அல்லது வேறு ஏதாவது தாங்குபொருளையோ வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. `ஹெரோடோட்டஸ்' என்ற கிரேக்க அறிஞர் கி.மு. 500-ல் இதைப் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார்.
ஹொஜசிஸ்ட்ரேடஸ் என்ற கைதி, தப்பித்துச் செல்வதற்காக சங்கிலியால் கட்டப்பட்டிருந்த தனது கால்களை வெட்டிக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும், பின்னர் மரக்குச்சியைக் கொண்டு செயற்கைக்காலை உருவாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல மார்க்கஸ் செர்கியஸ் என்ற ரோமானிய வீரர் ப்யூனிக் போரில் கையை இழந்துவிட்டதாகவும், அதற்குப் பதில் இரும்பில் கை பொருத்திக்கொண்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
ஆம்புரோஸ் பாரீ என்பவர் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர், அடிபட்ட இடத்தில் கொதிக்கும் எண்ணையை வைத்துச் சிகிச்சை செய்தார். முட்டை, வெள்ளை ரோஜா, டர்பன்டைன் எண்ணை ஆகியவற்றைக் கொண்டு, காயம்பட்ட இடத்தை அடைத்தார். செயற்கை எலும்புகளை அங்கு பொருத்துவதற்கும் வழி கண்டார். செயற்கை கை, கால், நாக்கு ஆகியவற்றுக்குக் கூட செயற்கை எலும்புகளைப் பொருத்துவதற்கான வடிவங்களை இவர் தயாரித்திருந்தார்.
1696-ம் ஆண்டு வெர்டுவின் என்ற மருத்துவர், முழங்காலுக்குக் கீழே பொருத்தக்கூடிய செயற்கைக் காலை வடிவமைத்தார்.
1800-ம் ஆண்டு `ஆங்கிள்சீ' என்ற செயற்கைக்கால் வடிவமைக்கப்பட்டது. அதற்கு இந்தப் பெயர் எப்படி உண்டானது தெரியுமா? வாட்டர்லூ சண்டையில் ஆங்கிள் என்ற பிரபு தன் கால்களை இழந்தார். இரும்பினால் ஆன முட்டி இணைப்பும், மரத்தினால் ஆன முட்டி இணைப்பும் கொண்ட செயற்கைக்கால்களை அவர் பொருத்திக் கொண்டார். அதனால் இதற்கு அப்பெயர் ஏற்பட்டது.
நன்றி-தினத்தந்தி
No comments :
Post a Comment