மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஒற்றை பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடு என்ற உச்ச வரம்பை நீக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசின் இந்தக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்த இந்தப் பிரச்னையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடும் அமளி நிலவியதால், இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.இந்த நிலையில், சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளித்த மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அதிகரிக்கும் நடவடிக்கையால், முதற்கட்டமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான தொழில்கள் மூலம் 50-ல் இருந்து 60 லட்சம் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும்," என்றார். மேலும், "நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீட்டுக்கு வழிவகுக்கப்படும்," என்றார் ஆனந்த் ஷர்மா.
No comments :
Post a Comment