சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறமாதிரி, பான் கார்டு, வங்கிக் கணக்கு இல்லாமல் ரூ.20 ஆயிரம் வரை ரொக்கமாக முதலீடு செய்ய செபி 2012-ம் ஆண்டு அனுமதி அளித்தது.
Mutual Fund in Tamil |
சேலத்தைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் பி.ஆர்.ஜெகன்நாதனிடம் கேட்டோம். ''சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. ஏற்கெனவே இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத் திட்டத்திலேயே யாரும் முதலீடே செய்யவில்லை.
இதற்கான எந்த வசதியையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்யவில்லை. தற்போது ரொக்க முதலீட்டு அளவை அதிகரிக்கும்போது அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு. எனவே, எந்த ஃபண்ட் நிறுவனமும் இந்தத் திட்டத்தில் அக்கறை காட்டுகிற மாதிரி தெரியவில்லை'' என்றார்.
இவரைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த ஏஜென்ட் எம்.திருவேங்கடாச்சாரியிடம் பேசினோம்.
''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் கிராமப்புற மக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், யாரும் ரொக்கமாக ரூ.20,000 வரை முதலீடு செய்வதில்லை. காரணம், இதற்கான வசதிகள் இல்லை. கிராமங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் படிவம் 60-ன் மூலமாகவே வங்கிக் கணக்கைத் துவங்குகிறார்கள். இவர்களுக்குச் சில வசதிகளைச் செய்துதந்தால் மட்டுமே முதலீட்டை அதிகரிக்க முடியும்'' என்றார்.
ஃபண்ட் நிறுவனங்கள் கிராமப் புறங்களில் ரொக்க முதலீட்டுக்குத் தேவையான வசதிகளை ஏன் ஏற்படுத்தித்தரவில்லை என சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் அஜித் நரசிம்மனிடம் கேட்டோம்.
''ரொக்கமாக முதலீடு செய்வதற்கு உள்கட்டமைப்பு சார்ந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. சில ஊரில் ஒரு பணியாளருடன் அலுவலகம் அமைத்திருப்போம். அந்த இடங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடுதலாக முதலீடு செய்யவேண்டியிருக்கும். மேலும், கடந்த சில ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டில் சிறுமுதலீட்டாளர்களின் முதலீடு குறைவாகவே இருந்தது.
தற்போது பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஆரம்பித்திருப்பதால், கடந்த சில மாதங்களாக ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளது. அடுத்த 6-8 மாதத்துக்குள் இதற்கான வசதிகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இனி வங்கிகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களுடன் இணைந்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியை ஃபண்ட் நிறுவனங்கள் எடுக்கும்'' என்றார்.
செபியானது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் ரொக்க முதலீட்டு வசதியை செய்துதரலாம் என்றுதான் கூறியுள்ளதேயொழிய, அதைக் கட்டாயமாக்கவில்லை. தவிர, ரொக்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும்போதுதான் வங்கிக் கணக்கு தேவையில்லை. பணத்தை வெளியே எடுக்கும்போது கட்டாயம் வங்கிக் கணக்கு தேவை. அப்போது கே.ஒய்.சி-யைத் தரவேண்டியிருக்கும். அதாவது, முதலீட்டாளரின் புகைப்படம், முகவரிச் சான்று இணைத்து கே.ஒய்.சி தந்தால்தான் பணத்தை எடுக்க முடியும்.
ரொக்க வரம்பை உயர்த்துவதற்குப் பதில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், செபியும் இணைந்து கிராமப்புறங்களில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும், செபியும் தனியாக நிதி ஒதுக்கி உள்ளது. இந்தத் தொகையை செலவு செய்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது முக்கியம். இதை உடனடியாக செய்தால் மட்டுமே கிராமப்புறங்களில் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்க முடியும்.
Thanks to Nanayam Vikatan for this post on Mutual Fund in Tamil which says about மியூச்சுவல் ஃபண்ட் ரொக்க முதலீடு... யாருக்கு பயன்?
No comments :
Post a Comment