பள்ளி துவங்குவதற்க்கு முன் கொஞ்சம் இதை முடித்து விடுங்களேன்

கோடை விடுமுறை என்றாலே அது பள்ளி விடுமுறைதான்; அதனால், விடுமுறை நாட்களில் உங்கள் செல்லங்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்காக, அவர்களை, அதட்டிக் கொண்டிருக்காமல், முடிந்தவரை அவர்களை விடுமுறையை கொண்டாட அனுமதியுங்கள்.

இந்த விடுமுறை காலம் தரும் உற்சாக அனுபவம்தான், அடுத்த கல்வி ஆண்டுக்குள் அவர்களை உற்சாகமாக அடியெடுத்து வைக்க உதவும்.
அதனால், உங்கள் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்;

உங்களுடைய சொந்த ஊருக்கு, குழந்தைகளை அழைத்துச் சென்று, உறவுகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இது, குடும்ப உறவுகள் மேம்பட அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.

குழந்தைக்கு ஏதாவது மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், அதை, விடுமுறை நாட்களுக்குள், முடித்து விடுவது நல்லது. பள்ளி திறந்தபின், ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டு, விடுமுறை எடுத்தால், பிள்ளைகளுக்கு படிப்பின் மீது, ஒருவித அலட்சியத்தை ஏற்படுத்தி விடும்.

தேர்வு நேரத்தில், விடிய விடிய படித்தார்களே என்ற எண்ணத்தில் விடுமுறை நாட்களில், கொஞ்சம் ப்ரீயாக தூங்கட்டும் என, சில பெற்றோர் விட்டுப் பிடிப்பர். இதனால், பள்ளி திறந்து பிள்ளைகள் மறுபடி பிசியாகும் போது, இந்த அதிகபட்ச காலை தூக்கம் பெற்றோருக்கு டென்ஷனை ஏற்படுத்தும்.

அதனால், பள்ளி துவங்க சில நாட்கள் இருக்கும் போதே, குழந்தைகளின் காலை தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, கட்டுக்குள் கொண்டு வந்து விடுங்கள்.

அதேபோல், பள்ளிக் கட்டணம்; முன்கூட்டியே, இதற்கான தொகையை தயார் செய்து விடுங்கள். கடைசி நேரத்தில் பீஸ் கட்ட தடுமாறும் நிலைக்கு ஆளாக வேண்டாம். இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர்.

சிலர், வீடு மாறும் கட்டாயத்தில் இருப்பர். இப்படிப்பட்டவர்கள் எடுத்த எடுப்பில், பள்ளியை மாற்றி விட முடியாது. அதனால், புது வீட்டில் இருந்து பள்ளி தொலைவு என்றால், குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஏற்பாட்டை முதலிலேயே கவனியுங்கள்.

சில பள்ளிகளில், ‘சீருடைகளை நாங்களே தருவோம்; தைக்கவும் ஏற்பாடு செய்து விடுவோம்…’ என்பர். தைப்பதற்கும் ஒரு கணிசமான தொகையை கறந்து விடுவர்.

சில பள்ளிகளில் சீருடை விஷயத்தை பெற்றோரிடம் விட்டு விடுவர். இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர், பள்ளிச் சீருடைகளை ஒரு மாதத்துக்கு முன்பே வாங்கி, தைக்க கொடுத்து விடலாம். இதில், தாமதித்தால் பள்ளி துவங்கிய பிறகும், தையல் கடையில் தவம் கிடக்க வேண்டியிருக்கும்.

நாளை பள்ளி என்றால், முன்தினம் தான், சில பெற்றோர் உஷாராவர். ஸ்கூல்பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் என்று, அரக்கப் பறக்க வாங்குவர். இதனால், பிள்ளைகள், ‘எனக்கு இந்த டிபன் பிடிக்கலை… இந்த லஞ்ச் பாக்சையா நான் கேட்டேன்…’ என்கிற மாதிரி எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கி விடுவர்.

அதனால், ஒரு வாரத்துக்கு முன்பே, உங்கள் பிள்ளைகளையும் கடைக்கு அழைத்து சென்று, வாங்கிக் கொடுங்கள்.

பெரும்பாலான பள்ளிகளில் இப்போதே புத்தகங்களை கொடுக்கத் துவங்கியிருப்பர். வாங்கி வந்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர். பைண்ட் செய்யக் கொடுத்த புத்தகங்களை, பள்ளி திறப்பதற்கு முன், வாங்கி விடுங்கள். அது மாதிரி பிரவுன்ஷீட் அட்டை போடும் வேலையையும் முன்னதாகவே முடித்து விடுவது நல்லது.

பிள்ளைகளை புதிய பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர், அந்தப் பள்ளியில் கல்வி சம்பந்தமான எல்லா தகவல்களையும் முன்னதாகவே தெரிந்து கொள்வது நல்லது.

பள்ளியின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், உங்கள் பிள்ளைக்கும் கிடைக்கும் என்று நம்பிவிட வேண்டாம். குறிப்பாக, ‘கணினி லேப் வசதி’ உண்டு என்று, கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால், பயிற்சிக்கு தேவையான, கணினிகள் உள்ளனவா, பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை, சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பணி நிமித்தமாகவோ, தொழிலுக்காகவோ ஊர் மாறுவோரின் பிள்ளைகள், புதிய பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிஇருந்தால், தரமான பள்ளியை தேர்வு செய்வது முக்கியம்.

சில பள்ளிகளில் பெயருக்கு ஒரே ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கும்; அதோடு சரி. அடிக்கடி பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடக்கிற பள்ளியை தேர்வு செய்யுங்கள்.

அப்போது தான் பள்ளி நிலவரம், பிள்ளைகளின் படிப்பு, இதெல்லாம் தெரியவரும். வீட்டில் பிள்ளைகளின் அணுகுமுறைக்கும், பள்ளியில் அவர்களின் செயல்பாட்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால், ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் தெரிய வரும்.

பெரிய பள்ளிகள் என்று, கட்டணம் அதிகமாக வாங்கும் பள்ளிகளில் கூட, கழிப்பறை பக்கம் போனாலே குமட்டிக் கொண்டு வரும். இதற்குப் பயந்தே பல பிள்ளைகள் பள்ளிக்குப் போன பின், மறந்தும் கழிப்பறை பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை.

சிறுநீரை அடக்கி வைப்பதால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன், கிட்னி பாதிப்பும் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் கருதி, பள்ளியில் சேர்ப்பதற்கு முன், கழிப்பறை எப்படி இருக்கிறது என்பதை, கட்டாயம் பார்க்க வேண்டும்.

பார்த்ததுமே குடலைப் புரட்டிக் கொண்டு வந்தால், சொல்லாமல் கொள்ளாமல், ‘எஸ்கேப்’ ஆகி விடுங்கள். நல்ல கல்வி முக்கியம்; நல்ல ஆரோக்கியமும் அவசியம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf