Causes of Using iPhone and Mobile-Phones | மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் ?

மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன என்ற நிலையில், மொபைல் போனை, உடலில் இருந்து 1.5 முதல் 2.5 செ.மீ., தூரத்தில் வைத்து பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் மொபைல் போன் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஒருவர், மற்றொருவருடன் தொடர்பு கொள்ள வீட்டில் உள்ள போனையோ அல்லது போன் பூத்தையோ பயன்படுத்தவேண்டும் என்று இருந்த நிலையை மொபைல் போன் வரவு தகர்த்தது.இதன் காரணமாக, ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும், தான் பேச விரும்புபவரிடம் மொபைல் போன் மூலம் எளிதாக தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியால் மொபைல் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 60 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன.

மொபைல் போன், ஸ்மார்ட் போன் மற்றும் ஐபாட் ஆகியவை தற்போது அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.இவற்றின் விற்பனை அதிகரிப்பு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை வளர்ச்சியின் அடையாளமாக கருதப்பட்டாலும், இதில் உள்ள ஆபத்து குறித்து தற்போது தெரிந்துள்ளது. மொபைல் போன் மற்றும் மொபைல் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.குறிப்பாக, மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவதால், அதிலிருந்து வரும் கதிர்கள் காதை பாதிக்கும் என்றும், பாக்கெட்டில் வைத்திருந்தால் இதயத்தை பாதிக்கும் என்றும், இடுப்பில் வைத்திருந்தால் சிறுநீரகத்தைபாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. மொபைல் போன் வாங்கும் போதே அதனுடன் பாதுகாப்பு கையேடும் கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த கையேட்டை யாரும் படிப்பதில்லை அல்லது படிப்பதற்கு நேரம் இல்லை. ஆப்பிள் ஐபோன் நான்கு வாங்கும் போது அதனுடன் கொடுக்கும் கையேட்டில், "ஐபோனை பயன்படுத்தும் போது, உங்கள் உடலில் இருந்து 15 மி.மீ., தூரத்தில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.அதற்கான உறை அல்லது பெல்ட் கிளிப் அல்லது அதற்கான பிடிப்பான் போன்றவற்றை பயன்படுத்தவும்.

உலோக பொருட்களை தொலைவில் வையுங்கள்' என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட் போன் ஆகியவற்றை வைக்க, அதற்காக உள்ள பவுச்களை பயன்படுத்த வேண்டும். பிளாக்பெர்ரி 9,000 போன் பயன்படுத்துபவர்கள் உடலில் இருந்து 2.5 செ.மீ., வெளியே அதற்காக உள்ள உறையில் இட்டு தொங்கவிட வேண்டும் என்று பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (எப்.சி.சி.,) வழிகாட்டி குறிப்பிடுகிறது. மோட்டோரோலா டபிள்யூ 180 போனை பயன்படுத்துபவர்கள், தங்கள் உடலுக்கு வெளியே ஒரு அங்குலம் தொலைவில் வைத்து கொள்ள வேண்டும். இந்த மொபைல் போனை வைப்பதற்கு நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாத கிளிப்களையோ, பிடிப்பான்களையோ, தொங்கும் உறைகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "மொபைல் போனால் உடல் நலத்திற்கு சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், அது குறித்து விஞ்ஞானிகளின் கவனத்திற்கு மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், உடலில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்து கொள்வது பாதிப்பை குறைக்கும்' என்கிறார் எப்.சி.சி.,யின் முன்னாள் அதிகாரி ராபர்ட் கிளைவ்லேண்ட்.

அமெரிக்காவில் விற்பனையாகும் எல்லா மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியை, கடந்த2001ம் ஆண்டு எப்.சி.சி., அனுப்பி மொபைல் போன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது.அதில், ஒரு கிலோகிராம் உடல் தசைகள் தாங்கக்கூடிய 1.6 வாட் ரேடியோ அலைவரிசைக்கு குறைவான கதிர்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், ரேடியோ அலைவரிசை கதிர்களால் வெப்ப பாதிப்பு போன்றவை ஏற்பட்டால் விஞ்ஞானிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும்,புளூடூத், வி-பி மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை பயன்படுத்தும் போது முழு அளவில் வரும் சிக்னல்களின் சக்தி ஆகியவற்றிற்கு தரம் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.ஆனால், மொபைல் போன் வைத்திருப்பவர்கள் முழு சக்தியுடன் வெளிப்படும் ரேடியோ அலைவரிசை கதிர்களால் ஏற்படும் ஆபத்து குறித்து கவலைப்படாமல், உடலை ஒட்டியுள்ள சட்டை அல்லது பேன்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்துகின்றனர்.ரேடியோ அலைவரிசை கதிர்கள் மொபைல் போனில் இருந்து அதிக சக்தியுடன் கூர்மையாக வெளிப்படுகிறது. தூரம் செல்ல செல்ல அதன் சக்தி குறைகிறது. எனவே, இனியாவது உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க 1.5 முதல் 2.5 செ.மீ., தூரத்தில் வைத்து மொபைல் போனை பயன்படுத்தினால் நல்லது.

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில் முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல் தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.

குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள், "ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது. இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும் பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன. இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ,நெட் பிரவுசிங் செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும் போது ஆபாச பட, "பாப் அப்'கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால், மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட் பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும் பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு சுதாகர் கூறினார்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf