மனிதர்களுக்கு மிகவும் துன்பமானது எது என்று கேட்டால், பிறப்பும், இறப்பும் தான்.பல பிறவிகள் எடுப்பதால், பல முறை இந்தத் துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறது; அதே போல், இறக்கும் போதும் துன்பம் தான். நோய்வாய் பட்டு படுத்து விடுகிறான். அப்போது அவனுக்கு, "நோயும், பாயும்'தான் துணை.
"பாயும்தான் துணை' என்பதன் பொருள் என்னவெனில், வயதான காலத்தில், பிழைக்க மாட்டான் என்ற நிலை வரும் போது, இவனை மெத்தையிலா படுக்க வைப்பர்? ஒரு பாயை விரித்து - அதுவும் கூட பழைய பாயாக இருக்கும் - அதில், படுக்க வைத்து விடுவர். அந்த பாய் தான் இவருக்குத் துணை.அந்த நேரம் கண் பஞ்சடைத்து விடும்; காது கேட்காது; உடலில் வலிமை இராது. கஞ்சி குடித்தால் கூட ஜீரணமாவது கஷ்டம். வைத்தியர் வந்து கையை பிடித்துப் பார்த்து, "அக்னி மந்தம்' என்பார். அதாவது, வயிற்றில் ஜட ராக்னியின் உஷ்ணம் குறைந்து விட்டது என்று பொருள்.
இப்படி அக்னி மந்தம் ஏற்பட்டு விட்டால், எதை சாப்பிட்டாலும், ஜீரணமாகாது.அந்த நேரம் தான் பல வித எண்ணங்கள் தோன்றும். "அடடா... வீட்டை யாருக்கு எழுதி வைப்பது, நிலம் யாருக்கு, நகை, பணத்தை யாருக்குக் கொடுப்பது...' என்றெல்லாம் எண்ணம் வரும்.கடைசியில் எதையும் சரிவர செய்யாமல், போய் விடுகிறான்.இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய்கள் எல்லாமே மனிதனின் பாவங்களின் பலன் தான்.
ஒரு வீடு கட்டப்படு கிறது. அதுதான் பிறப்பு. அந்த வீடு பிறகு பழுதடைந்து விடுகிறது; அதுதான் நோய். உடனே, பழுது பார்க்கப்படுகிறது; இதுதான் சிகிச்சை. அப்படியும் அது நாளடைவில் ஒவ்வொரு இடமாக இடிந்து விழுகிறது. இதுதான் அதன் மூப்பு. பிறகு, பழுது பார்த்தும் பயனில்லாமல் இடிந்து விழுந்து விடுகிறது; இதுதான் அதன் இறப்பு.
எந்தப் பொருளுக்கும், எந்த மனிதனுக்கும் இது போன்ற பிறப்பு, நோய்கள், மூப்பு, இறப்பு என்பவை உண்டு. ஆகவே, கடைசியில் இறப்பு என்பது நிச்சயமானது. அப்படி இறந்த பின், மீண்டும் பிறக்காமலிருந்தால் மேலும், மேலும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிராது.
பிறவி ஏன் ஏற்படுகிறது... பாவ, புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்க வேண்டி தான் பிறவி ஏற்படுகிறது. சரி... முன் ஜென்ம பாவங்களின் பலன்களை அனுபவித்து விட்டால் மட்டும் போதுமா... இந்த ஜென்மாவில் எந்த பாவமும் செய்யாமலிருக்க வேண்டுமே. அது முடியுமா? முடியும்.
அகிம்சாவாதியாக இருந்து, தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கை நடத்தி, பகவானையே வழிபட்டு, பந்த பாசங்களை விட்டொழித்து மரணமடைந்தால், மறு பிறவி இருக்காது. எதை விட்டாலும், பந்த பாசங்களை விட முடியுமா? அது இருந்தால் மறு பிறவி தான். பந்த பாசங்களை விட வேண்டுமானால், அதற்கு வைராக்கியம் வேண்டும். அது எங்கே கிடைக்கும் என்று தேட வேண்டாம்; மனதிலேயே தான் இருக்கிறது!
No comments :
Post a Comment