Meenakshi Kalyanam: மீனாட்சி கல்யாணம்

கந்தர்வ லோகத்தில் வசித்த விச்வாவஸு என்பவன் சிவனருளால், வித்யாவதி என்ற குழந்தையைப் பெற்றான்.

ஒரு சமயம், வித்யாவதிக்கு, அம்பாள் அருள் பாலிக்கும், பூலோக புண்ணிய தலங்களுக்கு செல்ல வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது.

தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விச்வாவஸு அவளிடம், ‘கடம்பவனம் எனப்படும் மதுரையில், ‘சியாமளா’ என்ற பெயரில், அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவளை வழிபட்டு வா…’ எனக் கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க, வித்யாவதி கடம்பவனம் வந்தாள். சியாமளா தேவி சன்னிதி முன் நின்று, மனமுருக வழிபட்டாள்.

அந்த தலம், அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே, கந்தர்வ லோகத்துக்கு திரும்ப மனமின்றி, அங்கேயே தங்கி, அன்னைக்கு சேவை செய்தாள்.

அவளுக்கு மூன்று வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, ‘என்ன வரம் வேண்டும் கேள்…’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி, ‘குழந்தையாகக் காட்சி தந்த நீ, எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்…’ என்று, வேண்டிக் கொண்டாள்.

அவளது விருப்பம், அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று, அம்பாள் வாக்களித்தாள்.

அதன்படி, மறு பிறப்பில், சூரசேனன் என்னும் மன்னனின் மகளாக அவதரித்தாள் வித்யாவதி. அவளுக்கு காஞ்சனமாலை என, பெயரிட்டனர். ‘காஞ்சனம்’ என்றால், தங்கம். தங்கம் போல் ஜொலிக்கும் அழகுடன் திகழ்ந்த அவளை, மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. மன்னன் குழந்தை பேறுக்காக, புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அந்த யாகத்தில், மூன்று வயது குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அப்போது காஞ்சனமாலைக்கு, முற்பிறவியில் அம்பிகை வாக்களித்தது நினைவுக்கு வந்து, மகிழ்ந்தாள்.

யாகத்தில் தோன்றிய அக்குழந்தைக்கு, தடாதகை என, பெயர் சூட்டினர்.
ஆண் வாரிசு இல்லாத மன்னன், தடாதகைக்கு சகல கலைகளையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆண் மகனைப் போல் வளர்த்து, பின், மதுரையின் ஆட்சி பொறுப்பையும் ஒப்படைத்தான்.

இவள் மீன் போல, எப்போதும் விழிப்புடன் இருந்து, ஆட்சி செய்ததால், மீனாட்சி என்ற பெயரைப் பெற்றாள். இதன் பிறகு, அம்பாளுக்கு சியாமளா என்ற பெயர் மாறி, இறுதியில், மீனாட்சி என்ற பெயரே நிலைத்து விட்டது. ‘சியாமளம்’ என்றால், பச்சை. மீனாட்சி, பச்சை வண்ண மேனியளாக இருந்தாள்.

சியாமளா தேவி, கல்விக்குரிய தெய்வம். இதனால் தான், மதுரை கல்விக்குரிய கிரகமான புதன் ஸ்தலமாக விளங்குகிறது. தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி இத்தலத்தில் அருளுகிறாள்.

இதனால் தான், பெண்களின் தெய்வமாக போற்றப்படுகிறாள். உலகையே வென்ற அவள், சுந்தரேஸ்வரரை மணம் முடித்து, இன்றும் நல்லாட்சி புரிகிறாள்.

அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf