மேல்நிலைக் கல்வி (பிளஸ் 2) தேர்ச்சி பெற்றவுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிமூப்பு உடனே கிடைக்க வேண்டும் என்பதால், மதிப்பெண் பட்டியல் பெற்ற உடன், வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாணவ, மாணவியர் நாடுகின்றனர். அனைவரும் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கால விரையம், போக்குவரத்து செலவு ஏற்பட்டு, மாணவ - மாணவியர், இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
இதை தீர்க்கும் வகையில், மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ - மாணவியர் படிக்கும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு வேண்டி, ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியரும், பள்ளியில் இருந்தே ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று (25ம் தேதி) வழங்கப்படுவதால், இன்று முதல் 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு 15 நாட்களில் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், 25ம் தேதியிட்ட பதிவுமூப்பு வழங்கப்படும்.
இப்பணியை, பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, "எல்காட்' ஆகியவை இணைந்து செய்யும். இவ்வாறு பதிவு செய்ய, மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்குச் செல்லும் போது, மாணவரது பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், 10வது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஏற்கனவே பதிவு செய்தவர்கள், அதற்கான வேலைவாய்ப்பு அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும். மாற்றுத் திறனாளிகள், தங்களது கல்வித் தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின், தங்களுக்கான முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளியின் மூலம் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், பதிவு செய்த நாளன்றே வழங்கப்படும். இவ்வாறு படித்த பள்ளியில் இருந்தே, ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்யும் வசதி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment