`கிரெடிட் கார்டு' பயன்படுத்தும் பலருக்கே அதன் அனைத்து வசதிகளும் தெரிவதில்லை. அந்தவகையில், `நிலுவை மாற்றம்' (`பாலன்ஸ் டிரான்ஸ்பர்') குறித்து அறிந்தவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள்.
அதென்ன நிலுவை மாற்றம்?
கிரெடிட் கார்டு நிறுவனங்களால் கிரெடிட் கார்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வசதியாகும் இது. இதன்படி, ஒரு கார்டில் உள்ள நிலுவைத் தொகையை, அதிகம் பயன்படுத்தாத இன்னொரு கார்டு அல்லது ஒரு புதிய கார்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
நிலுவை மாற்ற வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டி அல்லது வட்டியில்லாத காலம் போன்ற சலுகைகளை அளிக்கின்றன.
அதிகம் பயன்படுத்தாத அல்லது புதிய கார்டுக்கு ஒருவர் நிலுவை மாற்ற வசதியில் தொகையை மாற்றும்போது, அந்த கார்டின் `கிரெடிட் லிமிட் அளவு', மாற்றும் தொகைக்கு ஏற்பக் குறையும்.
உதாரணமாக, உங்களின் `கிரெடிட் அளவு' 1 லட்ச ரூபாய் என்ற நிலையில் நீங்கள் ரூ. 40 ஆயிரம் அளவுக்கு நிலுவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்கள் என்றால், உங்களின் கிரெடிட் அளவு 60 ஆயிரமாகக் குறையும். அத்துடன், கிரெடிட் அளவில் 80 சதவீதத் தொகைக்கு மேல் நிலுவை மாற்றம் செய்ய முடியாது.
நிலுவை மாற்ற வசதி, எப்போது பயனுள்ளதாக இருக்கும்?
அதிக வட்டி விதிக்கப்படும்போது: உங்களின் நடப்பு கிரெடிட் கார்டு தொகைக்கு விதிக்கப்படும் வட்டி, புதிய கார்டு ஒன்றுக்கு விதிக்கப்படும் வட்டியை விட அதிகமாக இருக்கும்போது, நிலுவைத் தொகையை புதிய கார்டுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் வட்டியைக் குறைத்துக்கொள்ளலாம்.
சேவை சரியில்லாதபோது: நடப்பு கிரெடிட் கார்டு நிறுவனத்தின் சேவை, குறிப்பாக சரியாக `பில்' அனுப்பாமல் இருப்பது, பில் தொகைக்கு ரசீது அனுப்பாதது போன்றவற்றின்போது நிலுவை மாற்ற வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போது, நடப்பு கார்டில் இருந்து புதிய கார்டுக்கு தொகையை மாற்றம் செய்து, நடப்பு கார்டு சுமையில் இருந்து விடுதலை பெறலாம்.
நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாதபோது: ஒருவருக்குத் தனது கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை அதிகமாகி, பண நெருக்கடி காரணமாக அதை உடனடியாகச் சரிசெய்ய முடியாதபோது, நிலுவை மாற்றம் ஒரு தற்காலிகமான நிவாரணமாக அமையும். ஆம், நீங்கள் `மூச்சு விட்டுக்கொள்ள' ஒரு வாய்ப்புதான் இது.
No comments :
Post a Comment