இன்று காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருவரும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக் கிறார்கள். அதனால், ஒவ்வொரு வீட்டிலும், ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று பல்வேறு காப்பீடுகளை எடுத்திருக்கிறார்கள்.
அதெல்லாம் சரி, காப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதில் நாம் போதுமான அக் கறை எடுத்துக்கொள்கிறோமா? இனிமேல் காப்பீட்டுப் படிவங்களை நிரப்பும்போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்...
1. படிவத்தை நீங்களே நேரடியாக நிரப்புங்கள். ஒரு குறிப்பிட்ட காலியிடத்துக்கான பதிலை எப்படி நிரப்புவது என்று தெரியாவிட்டால் ஏஜெண்டின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால் படிவம் உங்களாலேயே முழுமையாக நிரப்பப்பட வேண்டும். வேறு வழியே இல்லாமல் ஏஜெண்டை படிவத்தை நிரப்பச் சொன்னாலும், கையெழுத்து இடுவதற்கு முன் ஒருமுறை முழுமையாக, நிதானமாகப் படித்துவிடுங்கள். படிவத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்று கவனிப்பது மிக அவசியம். எந்த தவறான தகவலும் பின்னாளில் உங்களுக்கு தொல்லை தருவதாக அமைந்துவிடும்.
2. நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்திட்டு, ஏஜெண்ட் பூர்த்தி செய்துகொள்வார் என்று விடவே விடாதீர்கள்.
3. தேவையான எல்லா தகவல்களும் அளிக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். எந்த உண்மையையும் மறைக்க முயலாதீர்கள். அது தேவையற்ற ஒன்றாக உங்களுக்குத் தோன்றினாலும்.
4. சில நேரங்களில், `பிரீமியம்' தொகையைக் குறைக்கச் சில உண்மைகளை `அடக்கி வாசிக்கும்படி' சில ஏஜெண்டுகள் சொல்லக்கூடும். அப்படிச் செய்யாதீர்கள். ஏஜெண்டுக்கு பாலிசிக்கு உரிய கமிஷன் கிடைத்துவிடும். இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது கஷ்டப்படப் போவது நீங்கள்தான். மருத்துவக் காப்பீட்டுப் படிவங்களுக்கு இது மிகவும் பொருந்தும்.
5. சில இடங்களில் கேட்டிருக்கும் தகவல் தேவையற்றதாக, பொருந்தாததாக இருந்தால், அங்கு கோடிட்ட இடத்தை வெற்றிடமாக விடாமல் குறுக்குக் கோடிடுங்கள் அல்லது `பொருந்தாது' என்று குறிப்பிடுங்கள்.
6. பாலிசியை பெற்ற பின்னரும், நீங்கள் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தில் ஏதேனும் ஒரு தகவல் தவறு என்று உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.
புதிதாக ஒரு காப்பீட்டைப் பெற முயலும்போதெல்லாம் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் இருப்பதும், இவற்றைச் சரியாகப் பின்பற்றி இருக்கிறோமா என்று பார்ப்பதும் ரொம்பவே முக்கியம். அந்த முன்னெச்சரிக்கைச் செயல்பாடு, இழப்பீடு பெற முயலும்போது உங்களின் அவதிகளையும், மன உளைச்சலையும் வெகுவாகக் குறைக்கும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதன் நகல் ஒன்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
No comments :
Post a Comment