சில்லரை வர்த்தக விஷயத்தில் மத்திய அரசுஆணவம்: ஜெயலலிதா

0 comments
"சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது, மத்திய அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இதை அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்த முடிவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என, மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் ஆணவப் போக்கை கண்டித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது குமுறலை அறிக்கையாக நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது அங்கு முடிவு எடுக்கவில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தன்னிச்சையான முடிவு எடுப்பதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

4 கோடி பேர் வேலைக்கு அபாயம்: நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கின்றனர். மேலும் 4 கோடி பேர், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இவர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே, அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. வேலைவாய்ப்பு பறிபோகும்.நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே, அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்னைகளையும் கையாள, நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சில பெரிய வர்த்தக அமைப்புகள், தங்கள் எதிர்கால பணப்புழக்கத்திற்கு வழி தேட கண்டுபிடித்த செயலாகக் கருதலாம்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, தமிழகத்தில் அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மத்திய அரசு உடனடியாக இம்முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாயாவதி காட்டம் : லக்னோ: "சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா

0 comments
சில்லரை வர்த்தகத்தில் எக்காரணம் கொண்டும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

‘பன்பொருள் சில்லரை வணிகத்தில் (multi brand retail) அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் (single brand retail) அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்’ என்றும் அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

நாட்டில் 40 கோடிப்பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்துவரும் வேளையில், 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கும் நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் ஜெயலலிதா எச்சரித்திருக்கிறார்.

தவிரவும் மாநில அரசுகள் எதனையுமே கலந்தாலோசிக்காமல் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது அரசின் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுவதாக ஜெயலலிதா அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

எப்படியும் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.சர்வதேச உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, உற்பத்தியாகும் பொருட்களை சரிவர சேமிக்க வசதிகள் இல்லாமையால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப்பொருள்கள் விற்கப்படாமல் வீணாகிவிடுகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.ஆனால் தமிழக வர்த்தகர்கள் எவரும் அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, தொடர் போராட்டங்களில் இறங்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

மத்திய அரசின் முடிவின்படி பத்து லட்சத்திற்கும் அதிகமான் மக்கட் தொகையுடைய 53 மாநகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடலாம், ஆனால் பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற் ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இப்போது அ இஅதிமுக, மேலும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் ஆகியவை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாக 28 மாநகரங்களில் அம்முடிவை அமல்படுத்தமுடியாமல் போகும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf