சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு

0 comments
சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, வர்த்தகர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக இருந்ததை, 100 சதமாகவும்உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அரசின் இந்த முடிவு, இன்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. அமைச்சரவையின் முடிவு குறித்து, இரு அவைகளிலும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும், பில்லியன்கணக்கான முதலீடுகள் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை விடுவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய இது முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார். அரசின் முடிவால், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் துறைகளில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
திரிணாமூல் காங்கிரஸார் அவையின் மையப்பகுதிக்கு வந்து, முதலில் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், அதன் பிறகு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றி சிந்திக்கலாம் என்று ஆவேசமாகக் கூறினார்கள்.

வால்மார்ட்

இந்த திட்டத்தின் விளைவாக டெஸ்கோ, வால்மார்ட் போன்ற சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளை ஆரம்பிக்க முடியும்.இதுநாள்வரை இந்த நிறுவனங்கள் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருட்கள் விற்க முடிந்ததே ஒழிய நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இவர்கள் பொருட்கள் விற்க முடிந்திருக்கவில்லை.இந்த முடிவு ஒரு நிர்வாக முடிவென்பதால், இதனை அறிவிப்பதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் கிடையாது.

கருத்து வேறுபாடுகள்

இந்த திட்டத்தால் இந்தியாவில் வியாபாரப் போட்டி ஏற்படும் அதன் விளைவாக பொருட்களின் விலை குறையும் தரம் உயரும் என்று இந்தியாவில் பணவீக்கமும் விலையேற்றமும் மிக அதிகமாக இருந்துவரும் சூழ்நிலையில் இத்திட்டம் நன்மை தரும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
ஆனால் பெரும் சர்வதேச நிறுவனங்கள் போட்டிக்கு வந்தால் இந்தியாவின் சிறிய வர்த்தகர்களும் ஏழை வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமது உற்பத்திப் பொருட்களுக்கு இந்திய விவசாயிகளுக்கு கிடைத்துவந்த விலை மேலும் குறையும் என்று இன்னொரு பக்கத்தில் வாதிடப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா

0 comments
சில்லரை வர்த்தகத்தில் எக்காரணம் கொண்டும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

‘பன்பொருள் சில்லரை வணிகத்தில் (multi brand retail) அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் (single brand retail) அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்’ என்றும் அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

நாட்டில் 40 கோடிப்பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்துவரும் வேளையில், 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கும் நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் ஜெயலலிதா எச்சரித்திருக்கிறார்.

தவிரவும் மாநில அரசுகள் எதனையுமே கலந்தாலோசிக்காமல் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது அரசின் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுவதாக ஜெயலலிதா அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

எப்படியும் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.சர்வதேச உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, உற்பத்தியாகும் பொருட்களை சரிவர சேமிக்க வசதிகள் இல்லாமையால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப்பொருள்கள் விற்கப்படாமல் வீணாகிவிடுகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.ஆனால் தமிழக வர்த்தகர்கள் எவரும் அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, தொடர் போராட்டங்களில் இறங்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

மத்திய அரசின் முடிவின்படி பத்து லட்சத்திற்கும் அதிகமான் மக்கட் தொகையுடைய 53 மாநகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடலாம், ஆனால் பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற் ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இப்போது அ இஅதிமுக, மேலும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் ஆகியவை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாக 28 மாநகரங்களில் அம்முடிவை அமல்படுத்தமுடியாமல் போகும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf